All books in தமிழ் IRV

Leviticus 24

தமிழ் IRV · chapter 24

27 அத்தியாயங்கள்

தமிழ் IRV / Leviticus / அத்தியாயம் 24

தமிழ் IRV · chapter 24

1 ¶ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

2 “குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப்பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் மக்கள் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.

3 ஆசரிப்புக்கூடாரத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் மாலைதொடங்கி விடியற்காலம்வரை யெகோவாவுடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றுவானாக; இது உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.

4 அவன் எப்பொழுதும் யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரியவைக்கக்கடவன்.

5 “அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பமும் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.

6 அவைகளை நீ யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு ஆறு அப்பங்கள் இருக்கும்படியாக வைத்து,

7 ஒவ்வொரு அடுக்கிலும் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்துடன் இருந்து, நன்றியின் அடையாளமாகக் யெகோவாவுக்கேற்ற தகனபலியாக இருக்கும்.

8 அப்பத்தை நிரந்தரமான உடன்படிக்கையாக இஸ்ரவேல் மக்கள் கையிலே வாங்கி, ஓய்வுநாள் தோறும் யெகோவாவுடைய சந்நிதியில் அடுக்கிவைப்பானாக.

9 அது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே சாப்பிடுவார்களாக; நிரந்தரமான கட்டளையாக யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாக இருக்கும்” என்றார்.

10 ¶ அக்காலத்திலே இஸ்ரவேலைச் சார்ந்த பெண்ணுக்கும் எகிப்திய ஆணுக்கும் பிறந்த மகனாகிய ஒருவன் இஸ்ரவேல் மக்களோடு புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் முகாமிலே சண்டையிட்டார்கள்.

11 அப்பொழுது இஸ்ரவேலைச் சார்ந்த அந்தப் பெண்ணின் மகன் யெகோவாவின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவனுடைய தாயின் பெயர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் மகள்.

12 யெகோவாவின் வாக்கினாலே தங்களுக்கு உத்திரவு வரும்வரை, அவனைக் காவலில்வைத்தார்கள்.

13 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:

14 “தூஷித்தவனை முகாமிற்கு வெளியே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லோரும் தங்கள் கைகளை அவனுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறிவார்களாக.

15 மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.

16 யெகோவாவுடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறியவேண்டும்; அந்நியனானாலும் இஸ்ரவேலனானாலும் யெகோவாவின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.

17 “ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.

18 மிருகத்தைக் கொன்றவன் மிருகத்திற்கு மிருகம் கொடுக்கக்கடவன்.

19 “ஒருவன் மற்றவனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.

20 நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.

21 மிருகத்தைக் கொன்றவன் அதற்கு பதிலாக வேறு மிருகம் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.

22 உங்களில் அந்நியனுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.

23 அப்படியே, நிந்தித்தவனை முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் மக்களிடம் சொன்னான்; யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.